Tuesday 4 September 2018

ஆசிரியர் தினக் கொண்டாட்டம் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

ஒரு குழந்தையை மனிதராக்குவதில் தாய், தந்தைக்கு எப்படி பங்கு இருக்கிறதோ, அதை விட பெரிய பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு. தெய்வத்தையே மாதா, பிதா, குருவுக்கு அடுத்த படியாக தான் நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் எனப்படுவோர். அவர்களை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டியது நம் கடமை. இருப்பினும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். 

ஆசிரியர் பணி: 

வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. அதையும் தாண்டி, வாழ்க்கையை வாழ கற்றுத் தர வேண்டும். இதன் அடிப்படை கூறுகளாவன ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவை அடங்கும். இப்பணியைச் செய்ய தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராக செயல்பட வேண்டும்.

பேராசிரியரும், முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாவது ஜனாதிபதியுமாக பதவி வகித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் பல பள்ளிகளில் இப்பொழுதே தொடங்கி விட்டன. 

ஆசிரியர் தினம்: 

ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மாபெரும் தத்துவ மேதையாக இருந்தார். இவரை கௌரவப்படுத்தும் வகையில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இதனை கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்: 

செப்டம்பர் 5ஆம் தேதியை ஒட்டி, பள்ளி, கல்லூரிகள் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி வருகின்றன. 

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: 

திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் ராதாகிருஷ்ணன் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டமும், எம்.ஏ பட்டமும் பெற்றவர். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். இந்து மத இலக்கியங்கள், மேற்கிந்திய சிந்தனைகளியும் கற்றுத் தேர்ந்தவர். 

1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார். 1923ல் இந்தியத் தத்துவம் என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். 

1931ல் ஆந்திர பல்கலைக்கழக் துணைவேந்தர், 1939ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946ல் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948ல் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967 வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியராக இல்லாமல், ஆசிரியர் சமுதாயத்திதற்கே பேராசிரியராக விளங்கிய பெருமகன் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். ஆசிரியப் பணி என்பது ஏதோ வாசித்து விட்டுப் போவதில்லை என்பதை சொல்லாமல் செய்து காட்டி இன்றளவும் இந்திய ஆசிரியர்களுக்கு பேரிலக்கணமாக திகழ்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

மாணவர்களை தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களுக்கு அறிவூட்டிய தாயுமானவன், ராதாகிருஷ்ணன். ஆசிரியராக பணியாற்றுவதை ஒரு வேள்வி போல செய்த ராதாகிருஷ்ணன், மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களை தெளிவுபடுத்தியவர். தன் வீட்டுக்கே வந்து மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கலாம் என்ற உரிமையைக் கொடுத்தவர். ரஷ்யாவில் தூதராகப் பணியாற்றியபோதும் கூட அவர் தனது ஆசிரியப் பணியை கைவிட முன்வரவில்லை. மாறாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியாரகப் பணியாற்ற அனுமதி பெற்று பணியாற்றினார். படிக்க வேண்டும், படித்துத் தெளிய வேண்டும், தெளிந்து அதன்படி நடக்க வேண்டும், நாம் பெற்றது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடம் நடத்திய பிதாமகன் ராதாகிருஷ்ணன். 


ஒவ்வொரு மாணவருக்கும் உதாரண புருஷர்களாய் ஆசிரியர்கள் இருப்பார்கள். ஆனால் ஆசிரியர்களின் உதாரணபுருஷராய் விளங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டுமே. சாதாரண ஆசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியக் குடியரசுத் தலைவராகி ஆசிரியர் சமுதாயத்திற்கே கெளரவமும், பெருமையும், பேறும் தேடிக் கொடுத்தவர். தனது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட உத்தரவிட்டது. அத்தோடு நில்லாமல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகளும், திறம்பட பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. இந்த அருமையான நாளில், நாம் இன்று இருக்கும் நிலைக்கு, அன்று நமக்குப் போதனை நடத்திய ஆசிரியர்களே காரணம் என்பதை மறவாமல், நமக்கு தாயினும் மேலாக அறிவுப் பால் புகட்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

அப்துல்கலாம் அவர்கள் ஆசிரியர்களை பற்றி தெரிவித்த கருத்து: " மோசமான ஆசிரியரிமிருந்து ஒரு நல்ல மாணவன் கற்றுகொள்வான் " சிறந்த ஆசிரியரான அப்துல்கலாம் வகுப்பறையை "நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் " என்று மாணவர்களுக்கு தனது கருத்துகளாக் உர்ச்சாகம் மூட்டுகிறார். வகுப்பறையின் கரும்பலகை வாழ்வின் ஒளிருமிடமாக்குகிறது என பள்ளி கரும்பலகையின் மகத்துவத்தை அறிய செய்கிறார். சாதரண மாணவராக இருந்து ஆசியராக மாறியது பெருமிதப் படசெய்கிறது என்று ஆசிரியத்துறையை பெருமிதப்படுத்துகிறார்.

No comments:

Post a Comment